மண்ணிவாக்கம், வரதராஜபுரம் ஊராட்சியில் 2 வீடுகளில் 28 பவுன் நகை திருட்டு

மண்ணிவாக்கம், வரதராஜபுரம் ஊராட்சியில் 2 வீடுகளில் 28 பவுன் நகை திருடப்பட்டது.
மண்ணிவாக்கம், வரதராஜபுரம் ஊராட்சியில் 2 வீடுகளில் 28 பவுன் நகை திருட்டு
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் சாய் அவென்யூ கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35), இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊரான காவிரிபாக்கத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்தவர்கள் அன்பரசுவை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 23 பவுன் தங்க நகை மற்றும் 135 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அன்பரசு ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஐபுரம் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாநகர் 11-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமணி ( 36). வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்றார். இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் சொந்த ஊரில் இருந்து வீடு திரும்பிய சுடலைமணியின் மனைவி சுப்புலட்சுமி வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து லாக்கரை பார்த்த போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சுப்புலட்சுமி மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com