

திருப்பத்தூர்,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மெய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஜெயா. இவர்களுடைய 2 வயது பெண் குழந்தை கீர்த்தனா.
இவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாதவன் நகரில் உள்ள சுப்பிரமணியன் என்பவர் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் வந்தனர். ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கினர். இந்த நிலையில் பூமிநாதனின் குழந்தை கீர்த்தனாவுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து குழந்தைக்கு திடீரென சளித்தொல்லை ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து பூமிநாதன் நேற்று முன்தினம் திருப்பத்தூர் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.