மீமிசலில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற 3 பேர் கைது

மீமிசலில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீமிசலில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற 3 பேர் கைது
Published on

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீசார் கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மீமிசல் அரசங்கரை அருகே வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் மஞ்சள் பண்டல்கள் இருந்தன.

இதனையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த திருப்புனவாசல் அருகே உள்ள கடவாக்கோட்டை பகுதியை சேர்ந்த செபஸ்தியான் (வயது 42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த சித்திக் (45), அஜ்மீர் கான் (40) ஆகியோர்தன்னிடம் கொடுத்து அனுப்பியதாக கூறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சித்திக், அஜ்மீர்கான் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த ஹக் என்பவர் எங்களிடம் மஞ்சளை கொடுத்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க சொன்னதாக தெரிவித்தனர்.இதை அறிந்த ஹக் தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக மீமிசல் போலீசார் செபஸ்தியான், சித்திக், அஜ்மீர்கான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஹக் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 630 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

மஞ்சள் தேவை அதிகரிப்பு

இலங்கையில் மஞ்சள் விளைச்சல் மிகவும் குறைவு. இலங்கையில் மஞ்சள் அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும். இதனால் மஞ்சள் தேவை அங்கு எப்போதும் அதிக அளவில் இருக்கும். தற்போது கொரோனா காலம் என்பதால் விமான சேவை இல்லாமல் இருப்பதால் இலங்கையில் மஞ்சள் இறக்குமதி மிகவும் குறைந்துள்ளது. இதனால் அங்கு மஞ்சள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு மஞ்சள் விலை 1 கிலோ ரூ.130 முதல் 150 வரை விற்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் 1 கிலோ மஞ்சள் இந்திய பணமதிப்பில் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது.இதனால் அதிகம் லாபம் கிடைப்பதால் கடத்தல்காரர்கள் மஞ்சளை இலங்கைக்கு கள்ளதனமாக கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com