குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 3 மின்மோட்டார்கள் பறிமுதல்

திருமருகல் அருகே குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 3 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருப்பூண்டியில் 6 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 3 மின்மோட்டார்கள் பறிமுதல்
Published on

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சில ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் வந்தது. அதன்படி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாறன் மற்றும் அலுவலர்கள் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார். வீடுகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதால் மற்ற வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

இதேபோல கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள வீடுகளில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், ஜோதிமணி தலைமையில், குடிநீர் வடிகால் வாரியத்தை சேர்ந்த ராகவன், கீழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் மஞ்சுபார்கவி மற்றும் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த 6 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும், அனுமதியின்றி இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலோ, மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சினாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com