திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

சத்தியமங்கலம்,

தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் செல்வதற்கு பண்ணாரி அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை முக்கிய ரோடாக உள்ளது. இதனால் மலைப்பாதையில் எப்போதும் பஸ், லாரி, கார், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.

திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கார், பஸ், பாரம் இல்லாத லாரிகள் எளிதாக மலைப்பாதையை கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகள் வளைவுகளை கடக்க முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது நாள்தோறும் நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

லாரி பழுதானது

இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து சிமெண்டு ஓடுகளை ஏற்றிக்கொண்டு மைசூருக்கு ஒரு லாரி சென்றது. கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் லாரியை ஓட்டினார். பகல் 2 மணி மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரி பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அந்த வழியாக பெரிய வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பிறகு லாரியில் இருந்த சிமெண்டு ஓடுகள் இறக்கப்பட்டு, லாரி ரோட்டோரத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னரே கனரக வாகனங்கள் சென்றன.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த போக்குவரத்து பாதிப்பால் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com