

வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் தனியார் பள்ளி அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.99 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஆலங்காயம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி கணேசனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குடியாத்தம் பகுதியை சேர்ந்த கொட்ட பாக்கு வியாபாரி ரஹீம் என்பவர் காரில் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 340-ஐ பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பெரிய பேட்டை பகுதியில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கந்திலியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் சோதனை செய்த போது உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.79 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.