அ.தி.மு.க. பிரமுகர், மகன் உள்பட 3 பேர் படுகொலை: 11 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது

தேர்தல் விரோதம் காரணமாக சிவகங்கை அ.தி.மு.க. பிரமுகர், அவருடைய 10 வயது மகன் உள்பட 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
அ.தி.மு.க. பிரமுகர், மகன் உள்பட 3 பேர் படுகொலை: 11 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
Published on

மதுரை,

சிவகங்கையை சேர்ந்தவர் கதிரேசன். அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு இவர் தனது காரில் மகன் பிரசன்னா (வயது 10), மகள் நிகிலா(5) ஆகியோருடன் சொந்த ஊரான பகையஞ்சானுக்கு சென்றுவிட்டு, சிவகங்கைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். டிரைவர் பூமிநாதன் காரை ஓட்டினார்.

இளையான்குடி ஊத்துக்குளி விலக்கு அருகே கார் வந்தபோது, ஒரு கும்பல் காரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் காருக்குள் இருந்தவர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது.

இதில் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

விசாரணையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக, 3 பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் அர்ச்சுனன், அக்னிராஜ், சத்யராஜ், பால்பாண்டி, சிவகுமார், யோகநாதன், விஜயகுமார், சுரேஷ் என்ற லெனின்குமார், கரந்தமலை, கணேசன், ஜெயக்குமார் ஆகிய 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று சிவகங்கை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. மற்ற 10 பேரை விடுதலை செய்தது.

ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

அதேபோல், இந்த வழக்கில் விடுதலையான 10 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு சிவகங்கை மாவட்ட கோர்ட்டு அளித்துள்ள 3 ஆயுள் தண்டனையை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம், என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com