வியாசர்பாடியில் வாலிபரை சுத்தியால் அடித்து கொன்ற நண்பர்

வியாசர்பாடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சுத்தியால் அடித்து கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
வியாசர்பாடியில் வாலிபரை சுத்தியால் அடித்து கொன்ற நண்பர்
Published on

ரத்த காயத்துடன்...

சென்னை வியாசர்பாடி தேபர் நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சூர்யா (வயது 32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சூரி நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சூர்யா நேற்று முன்தினம் வீட்டில் தலையில் ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைக்கண்ட இவரது அண்ணன் விஜயகாந்த் உடனடியாக அவரை மீட்டு, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நண்பர் கைது

இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சூர்யாவின் நண்பரான பாரிமுனையை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (37) மற்றும் தினேஷ் ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று வீட்டில் மது அருந்தியதும், அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் தினேஷ் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்குச் சென்ற நிலையில், மதுபோதையில் இருந்த முரளிகிருஷ்ணன் சுத்தியால் சூர்யாவின் தலையில் அடித்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com