

நெல்லை
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த முருகேஷ் குமார் (வயது 29), நெற்கட்டும்செவல் காட்டுப்புறத்தை சேர்ந்த ராஜா (25), சிவகிரி மலையடிக்குறிச்சியைச் சேர்ந்த மாரித்துரை (24). இவர்கள் 3 பேரும் சிவகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த 3 பேரின் குற்றச்செயலை கட்டுப்படுத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பரிந்துரையின் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து முருகேஷ்குமார், ராஜா, மாரித்துரை ஆகிய 3 பேரையும் சிவகிரி போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இதே போல் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் (25) என்பவர் மீது முறப்பநாடு மற்றும் நெல்லை மாநகர பகுதிகளில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் பொது மக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
எனவே சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் உத்தரவிட்டார். அவரது உத்தரவுப்படி பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் நேற்று சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.