அரசு பணிமனையில் தற்காலிக டிரைவர் இயக்கிய பஸ் தாறுமாறாக ஓடியதால் பரபரப்பு 4 பஸ்கள் சேதம்

புதுக்கோட்டை அரசு பணிமனையில் தற்காலிக டிரைவர் இயக்கிய பஸ் தாறுமாறாக ஓடி 4 பஸ்களின் மீது மோதியது. இதில் பஸ்கள் சேதம் அடைந்தன.
அரசு பணிமனையில் தற்காலிக டிரைவர் இயக்கிய பஸ் தாறுமாறாக ஓடியதால் பரபரப்பு 4 பஸ்கள் சேதம்
Published on

புதுக்கோட்டை,

பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நடந்தது. தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் உதவியுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நேற்று காலை கூடுதலாக பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்டிருந்த தற்காலிக டிரைவர்கள் எவ்வாறு பஸ்களை ஓட்டுகின்றனர் என்று பார்ப்பதற்கு, பஸ்களை இயக்குமாறு கூறி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது தற்காலிக டிரைவர் ஒருவர், டவுன் பஸ் ஒன்றை பணிமனைக்குள் இயக்கியபோது திடீரென அந்த பஸ் தாறுமாறாக ஓடியது. மேலும் அங்கு நின்ற 4 பஸ்களின் மீது மோதியது. இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. பின்னர் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது பஸ் மோதி நின்றது. இதில் தாறுமாறாக ஓடிய பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. தொடர்ந்து தற்காலிக பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த வழியாக வந்த அரசு பஸ்களில் ஏறி தங்கள் செல்லவேண்டிய பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றனர். அப்போது தற்காலிக கண்டக்டர்கள் பஸ் பாஸ் அனுமதி கிடையாது என கூறினார்கள். இதனால் மாணவ, மாணவிகளுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் சென்றதால், மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com