ரூ.4 லட்சம் பேட்டரிகளை திருடிய 3 வாலிபர்கள் கைது

செல்போன் கோபுரங்களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரூ.4 லட்சம் பேட்டரிகளை திருடிய 3 வாலிபர்கள் கைது
Published on

சேலம்,

சேலம் எருமாபாளையம் பகுதியில் பொதுத்துறை செல்போன் நிறுவனத்தின் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 72 பேட்டரிகள் திருட்டு போனது. இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் அருகே பொதுத்துறை செல்போன் நிறுவனத்திற்கான கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்த 24 பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்போன் நிறுவனத்தின் அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று கிச்சிப்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் குகை பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது22), முகமதுஅசாருதீன் (23) மற்றும் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த மணிகண்ட பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் கோபுரங்களில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com