கிருஷ்ணகிரி அணை ஊழியர்கள் 2 பேர் மீது சரமாரி தாக்குதல் 4 பேர் கைது

நுழைவுச்சீட்டு கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணகிரி அணை ஊழியர்கள் 2 பேர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அணை ஊழியர்கள் 2 பேர் மீது சரமாரி தாக்குதல் 4 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணமூர்த்தி (வயது 45). இவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வேலை பார்த்து வருகிறார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த திம்மரசன் (41) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 2 பேரும் பணியில் இருந்தனர்.

அப்போது 4 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்களிடம் அணை பூங்காவை சுற்றி பார்க்க நுழைவு சீட்டு கட்டணத்தை லட்சுமணமூர்த்தியும், திம்மரசனும் கேட்டனர். இது தொடர்பாக அந்த 4 பேருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் லட்சுமணமூர்த்தியையும், திம்மரசனையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

4 பேர் கைது

இதுதொடர்பாக லட்சுமணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரி கீழ்சோமார்பேட்டையை சேர்ந்த அரவிந்தன் (20), மேல்சோமார்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (22), வெங்கடேசன் (25), மதுரை பழங்கானத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com