

ராமேசுவரம்,
கொச்சியில் உள்ள அரசு கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக கட்டப்படட மத்திய அரசுக்கு சொந்தமான 4 கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து கொல்கத்தா செல்வதற்காக கடந்த 27-ந் தேதி முதல் சிங்கிலிதீவு அருகே உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் நேற்று பகல் 11.30 மணிக்கு ரெயில்வே பணியாளர்களால் திறக்கப்பட்டது. இதையடுத்து 4 கப்பல்களும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
வழக்கமாக இது போன்று தூக்குப்பாலத்தை கப்பல்கள் கடந்து செல்லும் போது ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் பாம்பன் ரோடு பாலம் வெறிச்சோடி காணப்பட்டது.