புத்துணர்வு முகாமில் பங்கேற்க தஞ்சை, திருவாரூர், நாகையில் இருந்து 5 யானைகள் தேக்கம்பட்டி பயணம்

இன்று தொடங்கும் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருந்து 5 யானைகள் தேக்கம் பட்டிக்கு புறப்பட்டு சென்றன.
புத்துணர்வு முகாமில் பங்கேற்க தஞ்சை, திருவாரூர், நாகையில் இருந்து 5 யானைகள் தேக்கம்பட்டி பயணம்
Published on

தஞ்சாவூர்,

இந்து சமய அறநிலையத்துறை ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யானைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்படும்.

இன்று தொடக்கம்

இந்த ஆண்டிற்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருந்து 5 யானைகள் நேற்று தேக்கம்பட்டிக்கு புறப்பட்டு சென்றன.

தர்மாம்பாள்-பூமாதேவி- செங்கமலம்

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானை தர்மாம்பாள், கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் பகுதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் யானை பூமாதேவி ஆகிய யானைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் லாரி மூலம் தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் நேற்று முகாமிற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் காலை 8.40 மணி அளவில் ராஜகோபாலசாமி கோவிலுக்குள் சென்ற யானை செங்கமலம், ராஜகோபாலசாமியை மண்டியிட்டு வணங்கியது.

அபயாம்பிகை-அபிராமி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை யானை நேற்று முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானைக்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்து தீபாராதணை காண்பித்தனர். அதனை தொடர்ந்து லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேள, தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர் ராஜன், ஆய்வாளர் மதியழகன் மறறும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com