திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு

திருமணமான 5 மாதத்தில், இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
Published on

ஆவடி,

ஆவடியை அடுத்த சேக்காடு, ராஜீவ்காந்தி நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சிவா(வயது 24). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனது தந்தையுடன் கட்டிட காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சவுந்தர்யா(21). பி.காம் படித்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சவுந்தர்யா, சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் ஆவார்.
நேற்று முன்தினம் இரவு சிவா, சவுந்தர்யா இருவரும் சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்கு சென்று தூங்கிவிட்டனர். நேற்று காலை படுக்கையில் இருந்து எழுந்த சிவா, தனது மனைவி சவுந்தர்யாவை எழுப்பினார். ஆனால் அவர் அசைவற்று கிடந்தார். அவர், படுக்கையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், சவுந்தர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்யாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

சவுந்தர்யாவுக்கு திருணமாகி 5 மாதங்களே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com