தஞ்சையில் 2–ம் நிலை போலீஸ்காரருக்கான உடற்தகுதி தேர்வு 592 பேர் பங்கேற்பு

தஞ்சையில் 2–ம் நிலை போலீஸ்காரருக்கான உடற்தகுதி தேர்வில் 592 பேர் பங்கேற்றனர்.
தஞ்சையில் 2–ம் நிலை போலீஸ்காரருக்கான உடற்தகுதி தேர்வு 592 பேர் பங்கேற்பு
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2ம் நிலை போலீசாருக்கான (போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை) காலி பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு கடந்த மார்ச் மாதம் 11ந் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தஞ்சையில் 3 இடங்களில் எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

ஆடவர்களுக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்க 827 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 235 பேர் வரவில்லை. மீதமுள்ள 592 பேர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்றனர். இவர்களின் எடை, உயரம், மார்பளவு ஆகியவை சரிபார்க்கப்பட்டு, 1,500 மீட்டர் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த பணி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜ், தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இதில் தேர்வானவர்களுக்கு வருகிற 19ந் தேதி கயிறு ஏறும்போட்டி நடத்தப்பட உள்ளது. உடற்தகுதி தேர்வையொட்டி ஆயுதப்படை மைதானம், நீதிமன்ற சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நீதிமன்ற சாலையில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 2ம் நிலை போலீசாருக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com