கிணத்துக்கடவு அருகே 6 ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

கிணத்துக்கடவு அருகே செல்போன் விளை யாட்டு மோகத்தால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு அருகே 6 ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே செல்போன் விளை யாட்டு மோகத்தால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

6-ம் வகுப்பு மாணவன்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் பழனி (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மனைவி கிட்டனம்மாள் (40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) என்ற மகன்களும் இருந்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஈஸ்வரன் 7-ம் வகுப்பும், அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் தனது தந்தை செல்போனில் கேம் விளையாடுவது உண்டு.

செல்போனுக்கு தகராறு

எனவே பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதலில் தந்தையின் செல்போனை யார் எடுப்பது என்பதில் போட்டியும் அடிக்கடி நடந்து வந்ததாக தெரிகிறது. அத்துடன் 2 பேருக்குள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரன், அர்ஜூனன் ஆகியோர் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது தந்தையின் செல்போனை முதலில் யார் எடுப்பது என்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

தூக்கில் தொங்கினான்

உடனே வீட்டில் இருந்த அக்காள் வேப்பிலைக்காரி (19) 2 பேரையும் சமாதானம் செய்து வைத்ததுடன், யாரும் செல்போனை எடுக்கக் கூடாது என்று கூறியதுடன், வீட்டில் இருந்த செல்போனை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டதாக தெரிகிறது.

பின்னர் 3 பேரும் வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து வேப்பிலைக்காரி வீட்டுக்கு வந்தபோது அங்கு வீட்டின் முன்கதவு சாத்தப்பட்டு இருந்தது.

உடனே அவர் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கு அர்ஜூனன் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பரிதாப சாவு

உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது தம்பியை மீட்டு கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த சிறுவன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டான்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அர்ஜூனன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

அடிக்கடி தகராறு

அண்ணன், தம்பி 2 பேரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதலில் தனது தந்தையின் செல்போனை யார் எடுப்பது என்பதில் அவர்களுக்குள் அடிக்கடி போட்டி ஏற்பட்டு வந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தந்தையின் செல்போனை எடுத்து கேம் விளையாடுவதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஈஸ்வரன் தனது தம்பிக்கு செல்போன் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அர்ஜூனன் அங்கு கிடந்த மதுபாட்டிலை உடைத்து தனக்குதானே வயிற்றில் குத்த முயன்றதாகவும் தெரிகிறது.

இதை பார்த்த கிட்டனம்மாள் அர்ஜூனன் கையில் இருந்த மதுபாட்டிலை பிடுங்கி, 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கேம் விளையாட செல்போன் கிடைக்காததால் அர்ஜூனன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கேம் விளையாட செல்போன் கொடுக்காததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொல செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com