ஆளூர் ரெயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

ஆளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆளூர் ரெயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்
Published on

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் போன்றவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகளும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.

ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார், அரசு பஸ் மற்றும் ரெயில் மூலம் நூதன முறையில் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அவற்றையும் அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில் துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் ஆளூர் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கேரளாவுக்கு கடத்துவதற்காக 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோணம் அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

மேலும், கேரளாவுக்கு கடத்துவதற்காக அரிசியை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com