9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு செங்கல்பட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

திருப்போரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு செங்கல்பட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆலத்தூரை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர், பையனூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் ஒருநாள் மாணவியின் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் அனைவரும் வெளியே சென்று இருந்தனர். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அசோக் குமார் (24) என்ற வாலிபர் திடீரென மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னரும் வெறி அடங்காத அந்த காமக்கொடூரன், ஈவு இரக்கமின்றி மாணவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த மாணவியின் குடும்பத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்ததைப்பார்த்து, அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்ட அவர்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு அருகே அசோக் குமாரின் செருப்பும், அவர் அணிந்திருந்த ஆடையும் கிடந்தது. மேலும் மாணவியின் கழுத்தை அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தியும் அங்கிருந்து மீட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அசோக் குமாரை அதிரடியாக கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், மாணவியை கற்பழித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் மாணவியை கொலை செய்த குற்றத்துக்கு அசோக் குமாருக்கு தூக்கு தண்டனையும், கற்பழிப்புக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஸ்ரீசீதா தேவி ஆஜரானார்.

9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம், செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com