பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

ராசிபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
Published on

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயது மகள் ராசிபுரம் அரசு பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரவேல் மகன் விஜி என்கிற விஜயகுமார் (வயது 28), கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவியை கூலி தொழிலாளியான விஜயகுமார் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்ததோடு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததோடு மாணவியை மீட்டனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே நேற்று அந்த வழக்கிற்கான தீர்ப்பை நாமக்கல் மகளிர் கோர்ட்டு நீதிபதி இளங்கோ வழங்கினார்.

பள்ளி மாணவியை கடத்தி சென்றதற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமணம் செய்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் என ஏக காலத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையையும் மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதத்தை விதித்து தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து விஜயகுமாரை கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com