

படப்பை,
நேற்று முன்தினம் குமரபிரசாத் தனது 5 வயது மகன் குமரகுருவை வீட்டில் இருந்து அழைத்து கொண்டு ஒரகடம் பகுதிக்கு சென்றார். அங்கு மது குடித்த அவர் அங்கேயே படுத்து தூங்கி விட்டார். அந்த சமயத்தில் குழந்தை குமரகுருவை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து முருகம்மாள் ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா தலைமையில் ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் கொண்ட 2 தனிப்படை கொண்ட போலீசார் காணாமல் போன குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை ஒன்று திருமுல்லைவாயல் பகுதியில் நிற்பதாக அம்பத்தூரை சேர்ந்த ஒருவர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டு ஒரகடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தையின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா குழந்தையை ஒப்படைத்தார்.