கடம்பூர் அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது பரிதாபம்

கடம்பூர் அருகே காவலுக்காக தோட்டத்தில் இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது.
கடம்பூர் அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது பரிதாபம்
Published on

டி.என்.பாளையம்,

கடம்பூரை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்தவர் மாரி (வயது 53). விவசாயி.

இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். அந்த மக்காச்சோளங்களை அறுவடை செய்திருந்ததால், அவைகளை தோட்டத்தில் கொட்டி குவித்து வைத்திருந்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு காவலுக்காக தோட்டம் அருகே இருந்த குடிசையில் படுத்திருந்தார்.

யானை மிதித்தது

இந்தநிலையில் நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு யானை அங்கு வந்தது. பின்னர் மாரி படுத்திருந்த குடிசையை காலால் எட்டி உதைத்து துவம்சம் செய்தது. அப்போது உள்ளே படுத்திருந்த மாரி எழுந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை துதிக்கையால் மாரியை பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. இதனால் அலறி துடித்த மாரி உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.

விவசாயிகள் பீதி

சத்தம் கேட்டு அருகே உள்ள தோட்டத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயிகள் அங்கு ஓடிவந்தார்கள். அதேநேரம் யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து விவசாயிகள் கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் கடம்பூர் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்றார்கள். பின்னர் மாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது, அந்த பகுதி விவசாயிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com