நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பேராசிரியை பன்றி காய்ச்சலுக்கு பலி

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பேராசிரியை பன்றி காய்ச்சலால் இறந்தார்.
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பேராசிரியை பன்றி காய்ச்சலுக்கு பலி
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்தவர் திரேஷா (வயது 60). இவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பன்றி காய்ச்சல் வார்ட்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமானது. இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை. மிகவும் அபாய நிலையில் இருந்த திரேஷா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்டபோது, பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திரேஷா முதலில் பன்றி காய்ச்சல் வார்டில் வைத்து சிகிச்சை அளித்தோம். ஆனால் அவர் ஏற்கனவே பிற நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக அவரது உடல் நிலை மேலும் மோசமானது. இதனால் கடந்த 2 நாட்களாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தோம். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துவிட்டார். திரேஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் ஆன பிறகே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனவே காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனே ஆஸ்பத்திரியை அணுகி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

பன்றி காய்ச்சலுக்கு பலியான திரேஷா ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே திரேஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை 2 பெண்கள் பார்க்க சென்றதாகவும், தற்போது அவர்களுக்கும் பன்றி காய்ச்சல் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 30 வயதுடைய பெண்ணும், பெண் குழந்தையும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் கூறினார்கள். ஓய்வு பெற்ற பேராசிரியை பன்றி காய்ச்சலுக்கு பலியான சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com