

கடலூர் முதுநகர்,
தமிழகத்தில் ரெயில்வே துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி, திண்டிவனம்- நகரி, திண்டிவனம்- திருவண்ணாமலை, சென்னை -மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு- பழனி, தர்மபுரி- மொரப்பூர், மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி உள்ளிட்ட 9 ரெயில்வே பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் கடலூர் முதுநகரில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், செல்வ மகேஷ், தடா தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா. அருள்மொழி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் மாநில நிர்வாகி பழ.தாமரைக்கண்ணன், தேவதாஸ் படையாண்டவர், போஸ் ராமச்சந்திரன், பி.ஆர்.பி.வெங்கடேசன், கோபிநாத், சந்திரசேகரன், சகாதேவன், ரத்தினவேல், ரமேஷ், மதி, அன்பு, பால்ராஜ் மற்றும் பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தலைவர் மணிபாரதி நன்றி கூறினார்.