தொழிலாளியிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் தொழிலாளியிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளியிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர் கைது
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அனுப்பர்பாளையம் பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து 15 வேலம்பாளையம் ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் அருகே சென்ற வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் கொடு. இல்லாவிட்டால் கத்தியால் உன்னை குத்தி விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன பிரகாஷ் தன்னிடம் இருந்த செல்போனை கொடுத்துள்ளார். அவரிடம் செல்போனை பறித்து கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து பிரகாஷ் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டுள்ளார்.

அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்று அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை 15 வேலம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை போரூர் பகுதியை சேர்ந்த ராபர்ட் (19) என்பதும், கடந்த ஒரு ஆண்டாக ஆத்துப்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com