உதவித்தொகை பெற்று தருவதாக விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி

விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மத்திய அரசின் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடி செய்வதால் விவசாயிகள் உஷாராக இருக்கும்படி வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.
உதவித்தொகை பெற்று தருவதாக விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி
Published on

திண்டுக்கல்,

விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வரவில்லை. வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றில் ஒரே மாதிரி பெயர் இல்லாமல் மாறி இருப்பதால் 7 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. அதுபோன்ற விவசாயிகளை கண்டுபிடித்து உதவித்தொகை பெறுவதற்கு தேவையான ஆலோசனைகளை வேளாண்மைத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய அரசின் உதவித்தொகையை வாங்கி தருவதாக கூறி சிலர், விவசாயிகளை சந்தித்து ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றை சேகரித்து சென்றுள்ளனர். மேலும் அதை பயன்படுத்தி சில விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளதாக புகார்கள் வருகின்றன.

அதிகாரி எச்சரிக்கை

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை கூறுகையில், விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண் மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் வழங்க வேண்டாம். இதனால் மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதால், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பான விவரங்களை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். அதேபோல் வேளாண்மை உதவி இயக்குனரை அணுகலாம் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com