

விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆதார் சேர்க்கை பணி சேவை மையங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணம் இல்லாத சேவை ஆகும். ஆனால் சில தனி நபர்கள் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. எனவே இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் படி பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், 1 வருட ஜெயில் தண்டனை விதிக்கவும் வழிவகை உள்ளது. எனவே பொதுமக்கள் ஆதார் எண்ணைப் பெற தமிழக அரசு நிறுவனங்களால் தாலுகா அலுவலகம், நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேவை மையங்களை மட்டுமே அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.