கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் குணமடைந்தார்

கொரோனாவில் இருந்து குணமடைந்து நடிகை ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யா ஆகியோர் வீடு திரும்பினர்.
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் குணமடைந்தார்
Published on

மும்பை,

இந்தியாவை தனது கோரப்பிடியில் இறுக்கி வரும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் பாலிவுட் திரையுலகத்தினரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமிதாப்பச்சனுக்கு கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரை தொடர்ந்து மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன், மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர்.

ஆனால் சில தினங்களுக்கு பிறகு அதாவது, கடந்த 17-ந்தேதி திடீரென ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் நானாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை தொடர்பான விவரங்களை அமிதாப்பச்சனும், அபிஷேக் பச்சனும் அடிக்கடி சமூக ஊடகங்கள் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

கொரோனா பாதிப்பு குறித்த அனுபவம் பற்றிய உருக்கமான பதிவையும் அமிதாப்பச்சன் வெளியிட்டார். கடந்த வாரம் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக வெளியான தகவலையும் அமிதாப்பச்சன் நிராகரித்தார்.

ஐஸ்வர்யா ராய் குணமடைந்தார்

இந்தநிலையில், கொரோனா தொற்றில் இருந்து 46 வயது ஐஸ்வர்யா ராயும், அவரது 8 வயது மகள் ஆராத்யாவும் குணமடைந்து உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

எனினும் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் தொடர்ந்து தனிமை வார்டில் மருத்துவ கண்காணிப்பிலேயே உள்ளனர். மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை நடிகர் அபிஷேக் பச்சன் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா, ஆராத்யா இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இனி வீட்டில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com