மடாதிபதி மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மரணம் தொடர்பாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அவர் ‘விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை‘ என்பது உறுதியானது.
மடாதிபதி மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
Published on

மங்களூரு,

உடுப்பி அருகே இரியடுக்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிரூர் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவர தீர்த்த சுவாமி(வயது 54). இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவில் லட்சுமிவர தீர்த்த சுவாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 19-ந் தேதி அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில் லட்சுமிவர தீர்த்த சுவாமியின் சகோதரர், இரியடுக்கா போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் லட்சுமிவர தீர்த்த சுவாமி விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து லட்சுமிவர தீர்த்த சுவாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சுவாமியின் மரணத்தை மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து இரியடுக்கா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் லட்சுமிவர தீர்த்த சுவாமியின் சொத்துகளை அபகரிப்பதற்காக அவரது உதவியாளர் ரம்யா ஷெட்டி அவரை கொலை செய்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ரம்யா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிரூர் மடம், மூலமடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் லட்சுமிவர தீர்த்த சுவாமி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகின. இதற்கிடையே பெஜாவர் மடத்தின் மடாதிபதியான விசுவேஸ்வர தீர்த்த சுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், லட்சுமிவர தீர்த்த சுவாமி பிரம்மசாரியத்தை கடைப்பிடிக்கவில்லை என்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடத்திற்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியின் சார்பில் லட்சுமிவர தீர்த்த சுவாமியின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சில பரபரப்பான தகவல்கள் வெளியாகின. அதாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் லட்சுமிவர தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததாகவும், அவரது உடலில் விஷம் கலந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மடாதிபதிக்கு பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களில் ஒருவரான அவினாஷ் ஷெட்டி கூறும்போது, லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானது. நாங்கள் சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்தோம். அவரது மரணம் இயற்கையானது. அவர் உடல்நலக்குறைவால் தான் இறந்து உள்ளார். அவர் இறந்து போவதற்கு முதல் நாள் இரவு சாப்பிட்ட உணவு பொருட்களில் விஷம் கலந்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com