திருச்சி ஜி-கார்னர் அருகே விபத்து: லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

திருச்சி பொன்மலை ஜி-கார்னர் அருகே லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
திருச்சி ஜி-கார்னர் அருகே விபத்து: லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையை சேர்ந்தவர் வீரமணி. இவர் துவாக்குடி போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் (வயது 19). இவர் திருச்சி-மதுரை சாலையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்ஸ்ட்ரூமென்டல் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை நரேஷ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தார். பொன்மலை ஜி-கார்னர் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நரேஷ் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com