போக்சோ வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் கடும் நடவடிக்கை

போக்சோ வழக்குகளில் விடுதலை பெறுவதற்காக கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போக்சோ வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் கடும் நடவடிக்கை
Published on

திருச்சி, ஜன.1-
போக்சோ வழக்குகளில் விடுதலை பெறுவதற்காக கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போக்சோ வழக்குகள்
திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலையான வழக்குகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 2019-ம் ஆண்டு 52 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 53 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 8 வழக்குகளும் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்கள் குற்றவாளிகளுடன் சமாதானமாக சென்றுவிட்டதாக தெரிவித்ததால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. ஒரு சில போக்சோ வழக்குகளில் ஊர் முக்கியஸ்தர்கள், ஊர்க்காரர்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோரை சமாதானம் செய்து வைத்துள்ளதும் தெரியவருகிறது.
இது சம்பந்தமாக தண்டனையில் முடிவுறாத வழக்குகள் பற்றி தற்போது காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததன் மூலம் எந்த வழக்காவது விடுதலையில் முடிந்ததாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்படியான நடவடிக்கை
மேலும், குழந்தைகளுடைய பாதுகாவலர்களோ அல்லது பெற்றோர்களோ குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத முறையில் கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதானபேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு நடந்து கொண்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்திருச்சிமத்தியமண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் விடுதலையான போக்சோ வழக்குகள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறுஅவர் அதில் கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com