போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு மீண்டும் சம்மன் - இன்று ஆஜராக உத்தரவு

இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு மீண்டும் சம்மன் - இன்று ஆஜராக உத்தரவு
Published on

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி, நடிகை பாரதி சிங் உள்ளிட்ட பலரை இதுவரை கைது செய்து உள்ளனர்.

இதில் கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து எலெக்ட்ரானிக் சாதனங்கள், தடை செய்யப்பட்ட சில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கடந்த மாதம் 13-ந் தேதி நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகரின் காதலி கேப்ரிலா டெம்ரிடியேசிடமும் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரை 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com