

மும்பை,
மும்பை பாந்திராவில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபாதையில் தங்கியிருந்தவர்கள் மீது கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதாக இந்தி நடிகர் சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு அவரை விடுதலை செய்து தீர்ப்பு கூறியது. மராட்டிய அரசு இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி சல்மான்கான் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் உத்தரவாதம் வழங்கிய நபரை மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் உத்தரவாத நடைமுறைகளை முடிக்குமாறு மும்பை செசன்ஸ் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் சல்மான் கானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இதற்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜரான சல்மான் கான் தனது ஜாமீன் உத்தரவாத நடைமுறைகளை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.