சேலத்தில் நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக சென்னை சென்றார்

சேலத்தில் நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
சேலத்தில் நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக சென்னை சென்றார்
Published on

சேலம்,

சேலத்தில் நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, டெங்கு மற்றும் இதர காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த நடிகர் சரவணன் (வயது 50), பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பருத்திவீரன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த 6ந் தேதி அந்த தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நடிகர் சரவணன் நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக நடிகர் சரவணன் கூறுகையில், தீபாவளி பண்டிகை அன்று எனக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அப்போது, சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது, பன்றிக்காய்ச்சலின் முதற்கட்ட பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு காய்ச்சல் குறைந்தநிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறேன், என்றார்.

இதனிடையே, நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. மேலும், நடிகர் சரவணன் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாகவும், அதன்மூலம் சளி, இருமல், காய்ச்சல் பாதித்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கியதாகவும் மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com