

மன்னார்குடி,
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் செங்கமலத்தாயாருக்கு ஆடிப்பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி செங்கமலத்தாயார் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியை தீட்சதர்கள் ஏற்றி வைத்து உற்சவத்தை தொடங்கி வைத்தனர். கொடியேற்றத்தின்போது, செங்கமலத்தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கருட வாகனத்தில் ராஜகோபாலசாமியும், சிம்ம வாகனத்தில் செங்கமலத்தாயாரும் எழுந்தருளி, இரட்டை புறப்பாடு நடைபெறுகிறது. 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆடிப்பூர தேரோட்டம் கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் நிர்வாக அதிகாரி சங்கீதா மற்றும் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.