

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
சட்டமன்ற தேதலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சோதனை யின்போது ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் அ.திமு.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பொள்ளாச்சி தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முன்னாள் கவுன்சிலர் வீட்டில் சோதனை
இதையடுத்து பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள், போலீசார் பொள்ளாச்சி- பாலக்காடு மெயின் சாலை மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டில் முருகன் இல்லை. இருந்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. அத்துடன் அதில் வாக்காளர்களின் பெயர் எழுதப்பட்ட நோட்டு, செல்போன் ஆகியவையும் இருந்தன.
ரூ.1 லட்சம் பறிமுதல்
உடனே அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அது இல்லை. அத்துடன் நடத்தப்பட்ட விசாரணையில் அது வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், வாக்காளர் பெயர் எழுதப்பட்ட நோட்டு, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ரகசிய தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பணத்தை முன்னாள் கவுன்சிலரிடம் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.