அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை

அ.தி.மு.க. நிர்வாகி கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Published on

ஓசூர்,

ஓசூர் அ.தி.மு.க. நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூரை அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). அ.தி.மு.க. உறுப்பினர். கடந்த 15-ந் தேதி ஓசூரில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவிற்கு வந்த முனிராஜ் கடத்தப்பட்டார். அவரது மோட்டார்சைக்கிள் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னர் மாயமான முனிராஜ் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் - அத்திப்பள்ளி இடையே பிருந்தாவன் லேஅவுட் என்ற இடத்தில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தார்.

அவரது உடலை கடந்த 17-ந் தேதி ஆனேக்கல் போலீசார் மீட்டனர். இந்த கொலை தொடர்பாக ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட முனிராஜ் ஓசூரில் கடத்தப்பட்டதால் ஓசூர் அட்கோ போலீசாரும் இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஓசூர் அருகே உள்ள ஈச்சங்கூரை சேர்ந்த ஹரீஷ், யஷ்வந்த், சூளகிரி அருகே உள்ள கோபசந்திரத்தை சேர்ந்த சந்தோஷ், ஓசூரை சேர்ந்த கேசவ் ஆகிய 4 பேரை ஆனேக்கல் போலீசார் நேற்று பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் பன்னார்கட்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து ஆனேக்கல் போலீசாரிடம் கேட்ட போது, முனிராஜ் கொலை தொடர்பாக 4 பேரை பிடித்துள்ளோம். கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். ஓரிரு நாட்களில் இந்த கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் பிடிபடுவார்கள் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com