உத்திரமேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது

உத்திரமேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சதுக்கத்தை சேர்ந்தவர் ஜெயவிஷ்ணு. அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் உத்திரமேரூர் அடுத்துள்ள பருத்திக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்தவர்.

இதற்காக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஜெயவிஷ்ணு தனது நண்பர்களுடன் உத்திரமேரூர் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள வெல்டிங் கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார்.

குற்றவாளிகளை கண்டு பிடிக்க மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பருத்திக்கொல்லையை சேர்ந்த பாபுவை கண்காணித்து வந்ததுடன் அவரது நண்பர்களான பருத்திக்கொல்லையை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 19), சரண் (19) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கொலை செய்யும் நோக்கத்தோடு வந்தவர்களுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது.

போலீசார் இருவரையும் கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் நீதிபதி இருதயராணி முன்னிலையில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com