திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர்

தக்கலை அருகே உள்ள கீழ மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், தொழிலாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உண்டு. இதில், இளைய மகன் சதீஷ் (வயது 31), தொழிலாளி. இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சதீஷ், வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த வேலை பிடிக்காமல் ஊர் திரும்பிய அவர், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

பெண் கொடுக்க...

மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை கிடைக்காததால் சதீஷ் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சதீசுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து பெண் பார்த்து வந்தனர். ஆனால், யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக சதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்கச் சென்றார். வெகு நரமாகியும் அவரது அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவருடைய தாயார் சுசீலா, அங்கு சென்று பார்த்தார். அப்போது, சதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர், சதீஷை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சதீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சதீசின் தாயார் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com