குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது கவர்னரிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மனு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடியிடம் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது கவர்னரிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மனு
Published on

புதுச்சேரி,

புதுவை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நாளை (புதன் கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கூறி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினர். அப்போது, சட்ட சபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவர உள்ளதை அனுமதிக்கக் கூடாது என்று சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சருக்கு சட்டம் நன்கு தெரியும். புதுவை யூனியன் பிரதேசம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் முதல்-அமைச்சர் அசோக சின்னம் பொருத்திய காரில் பயணம் செய்வதை மறந்து கை சின்னம் பொருத்திய காரில் செல்வதைப்போல் செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு விளைவுகளை சந்திக்க தயார் என்கிறார். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் இருப்பதை மறைக்க நாடகமாடுகிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்று கவர்னர் கிரண்பெடியிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com