பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர், மனைவி மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்பதில் போட்டா போட்டி: பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர், மனைவி மீது வழக்கு.
பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர், மனைவி மீது வழக்கு
Published on

திருவொற்றியூர்,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த 3-ந் தேதி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தார். அப்போது அவரை வரவேற்க ராயபுரம் மேம்பாலம் அருகே 49-வது வார்டு அ.தி.மு.க. இணை செயலாளர் ஜெயாமதி (வயது 34) உள்பட 10-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரும், அதேபோல் ராயபுரம் அ.தி.மு.க. அம்மா பேரவை பகுதி செயலாளர் சதீஷ்குமார், அவருடைய மனைவி ஜெயமாலினி ஆகியோர் தலைமையில் மற்றொரு பிரிவு அ.தி.மு.க.வினரும் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்பதில் அங்கிருந்த இருதரப்பு அ.தி.மு.க.வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெயக்குமாரின் அருகில் நிற்க நடந்த போட்டா போட்டியில் சதீஷ்குமார், அவருடைய மனைவி ஜெயமாலினி ஆகியோர் ஜெயாமதியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், ஜெயாமதியை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

தன் மீது தாக்குதல் நடத்தி அவமானப்படுத்திய சதீஷ்குமார், அவருடைய மனைவி ஆகியோர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த ஜெயாமதி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகார் ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. அதன்பேரில் ராயபுரம் போலீசார் அ.தி.மு.க. அம்மா பேரவை பகுதி செயலாளர் சதீஷ்குமார், அவருடைய மனைவி ஜெயமாலினி ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் விளைவித்தல், பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com