

ஜீயபுரம், மார்ச்.19-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நேற்று காலை ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி ஜயலலிதா வழியே வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. கட்சிக்கு தலைமையாக உள்ள கே.என்.நேரு,
12 ஆண்டு காலம் அமைச்சராக இருந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின்போது அமைச்சராக 5 ஆண்டு காலம் மட்டுமே நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அச்சமயம் ரூ.42 லட்சம் மதிப்பிலான மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது. பின்னர் வந்த தி.மு.க. ஆட்சியில் அதற்கு கீழே விசுவநாதன் மருத்துவக்கல்லூரி என பெயர் மட்டும் சூட்டப்பட்டது. எதிர்க்கட்சியான தி.மு.க. தகுதியை வளர்த்துக் கொண்டு அ.தி.மு.க.விடம் போட்டி போடவேண்டும். மேலூர் மக்களின் தேவைகளான சாலை, கழிப்பிடம் மற்றும் பாலம் அமைத்து தரப்படும் எனவும் கூறினார். அதனைதொடர்ந்து ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில் பிரசாரம் செய்த அவர், ஸ்ரீரங்கத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும். ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றி, மத்திய அரசினால் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பெற்று தருவேன் என்று கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துகருப்பன், அழகேசன், ஜெயகுமார், நடராஜ், செல்வராஜ், கூட்டணி கட்சி தலைவர்கள் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் உள்பட கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.