ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கார் விபத்தில் சிக்கியது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஈரோடு தி.மு.க. மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது, ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதனின் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கார் விபத்தில் சிக்கியது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
Published on

அன்னவாசல்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கலந்துகொண்டார். பின்னர் மாநாட்டை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ. மெய்யநாதன், காரில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டார்.

கார் திருச்சி வழியாக புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. எம்.எல்.ஏ. மெய்யநாதன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

நேற்று அதிகாலை புதுக்கோட்டை வெள்ளனூர் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், எம்.எல்.ஏ. சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. கண்ணாடியும் நொறுங்கியது. இந்த விபத்தில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் மற்றும் கார் டிரைவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த புதுக்கோட்டை அடப்பன் வயலை சேர்ந்த சக்தி, மோகன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளனூர் போலீசார் படுகாயமடைந்த சக்தி, மோகன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எம்.எல்.ஏ. மெய்யநாதன் மற்றொரு காரை ஏற்பாடு செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ. மெய்யநாதன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com