அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை 4 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை 4 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை 4 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும்
Published on

நடைமுறையில் இல்லை

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரத்தையும், வருகையையும் உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பதிவேட்டில் கையெழுத்து போடும் பழைய நடைமுறையை தான் பெரும்பாலான டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் டாக்டர்களின் பணி நேரம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. மேலும் அவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் தாமதமாக வருவது, தேவைப்படும் நேரத்திற்கு வெளியே செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனை தடுக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் பயோமெட்ரிக் பதிவேடு முறை பின்பற்ற வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணை பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் பின்பற்றப்படுவதில்லை. எனவே 2012-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

4 மாதங்களுக்குள்...

முடிவில், டாக்டர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வழிவகை செய்யும் அரசாணையை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 4 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com