அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் பேச்சு

அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று சமயபுரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் பேச்சு
Published on

சமயபுரம்,

மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சமயபுரத்திற்கு வந்த அவரை நகர செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் சிதம்பரம் வினோத், கே.வி.கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கட்சிகொடியினை ஏற்றி வைத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறும். மக்கள் எதிர்பார்க்கும் வகையில் தற்போது உள்ள ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தலில் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அ.ம.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்று பகுதிகளிலிருந்து, வாய்க்கால் வெட்டி இப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நிரப்பி அதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சமயபுரத்தில் உள்ள சிறுகடை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் சமயபுரம் மாரியம்மன் படத்தை நினைவு பரிசாக டி.டி.வி.தினகரனிடம் வழங்கினார். இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் மண்ணச்சநல்லூர், திருவெள்ளரை, புலிவலம், துறையூர், கண்ணனூர், தா.பேட்டை, தும்பலம், முசிறி கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்கள் மத்தியில் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com