அம்பத்தூரில் ரவுடி கொலை வழக்கில் 7 பேரிடம் விசாரணை

அம்பத்தூரில், ரவுடி கொலை வழக்கில் நண்பர்கள் 7 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அம்பத்தூரில் ரவுடி கொலை வழக்கில் 7 பேரிடம் விசாரணை
Published on

பூந்தமல்லி,

சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அரிதாஸ்(வயது 42). ரவுடியான இவர், ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு அரிதாஸ், அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்தினார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அரிதாசை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். கொலைக்கான காரணம் குறித்தும், தப்பி ஓடிய கொலையாளிகள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அரிதாசின் நண்பர்களான மணி என்ற நெப்போலியன்(35), செந்தில்(30), கரிகாலன்(32), மணிவண்ணன்(29) உள்பட 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கோவிலின் வரவு, செலவு கணக்குகளை அரிதாஸ் பார்த்து வந்தார். கோவில் நிர்வாகிகளிடம் கணக்கு வழக்குகள் குறித்து கேட்டு வந்தார். மேலும் தனக்கு கீழ்ப்படிந்துதான் இருக்கவேண்டும் என்று கூறி வந்ததுடன், அந்த பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் மாமூல் வசூலிப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இதனால் அவருக்கு பலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே அரிதாஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com