அம்பத்தூரில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

அம்பத்தூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அம்பத்தூரில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

பூந்தமல்லி,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). இவர், முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

அம்பத்தூர் 3-வது மெயின் ரோடு அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகதீஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஜெகதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள சந்தோஷபுரம், பாசில் தெருவை சேர்ந்தவர் துர்காதேவி (64). இவர், நேற்று முன்தினம் மாலை திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் கவுரிவாக்கம் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் அடைந்த துர்காதேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே துர்காதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்து துர்காதேவி மீது மோதியதாக மேடவாக்கம் கூட்ரோடு விஜயநகரை சேர்ந்த கார்த்திக் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com