அம்மன் கோவிலில் 6 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் 6½ பவுன் நகை மற்றும் வெள்ளி முகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவிலில் 6 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
Published on

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளத்தில் மஞ்சாடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அம்மனுக்கு அணிவிக்கப்படும் தங்க காப்பு, தங்க முகம் உள்பட 6 பவுன் நகைகள், மற்றும் 300 கிராம் வெள்ளி முகம் ஆகியவற்றை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் வழக்கம்போல், கோவில் நிர்வாகிகள் கோவிலை பார்வையிட்டுவிட்டு சென்றனர். நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் நகை வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொள்ளை

தொடர்ந்து, அறையின் உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி முகம் ஆகியவற்றை காணவில்லை. இரவு மர்ம நபர்கள் கோவில் அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் கிருஷ்ணபிள்ளை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com