

நெல்லை, மார்ச்:
நெல்லைக்கு வருகை தந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று காலையில் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்திக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கினார்.
திறந்த காரில் நின்றவாறு சென்ற ராகுல்காந்திக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை வரவேற்கும் வகையில், சாலையின் இருபுறமும் வரவேற்பு பேனர்கள், கட்சிக்கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாழை மரங்கள், கரும்புகளும் கட்டப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களிலும் மேளதாளம் முழங்க, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்றனர்.