தலைமறைவான மருந்துக்கடை ஊழியர் கைது

புளியந்தோப்பில் ரூ.1¼ லட்சத்துடன் தலைமறைவான மருந்துக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மருந்துக்கடை ஊழியர் கைது
Published on

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பில் தனியார் ஆஸ்பத்திரி அருகில் மருந்துக்கடை செயல்பட்டு வருகிறது. இதில் வேப்பம்பட்டு லட்சுமி நகரை சேர்ந்த சசிகுமார் (வயது 30) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த மருந்துக்கடையில் மேலாளராக இருப்பவர் ராஜேஷ் (35).

இந்த நிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் மருந்துக்கடையில் வசூலான 1 லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாயை வங்கியில் செலுத்துமாறு சசிகுமாரிடம் கொடுத்தார். ஆனால் அவர் வங்கியில் பணத்தை செலுத்தாமல் பணத்துடன் தலைமறைவானதாக தெரிகிறது.

அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்திடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சசிகுமார் வேப்பம்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் கைப்பற்றினர். ஆயிரம் ரூபாயை அவர் செலவழித்து விட்டதாக தெரிகிறது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com